Google
 

Wednesday, December 20, 2006

மீண்டும் ஞானி – 2. பகட்டு

மீண்டும் ஞானி – 2. பகட்டு

அன்று ஞானியை விருந்துக்கு அழைத்திருந்தேன். நன்றாக கீழே அமர்ந்து வாழை இலையில் போட்டு உணவை உண்டான். நடுவில் இரு முறை பேச முயன்றும் பதில் அளிக்க வில்லை. பிறகு கொல்லைபுறம் சென்று இலையை எங்கள் வீட்டு மாட்டுக்கு உணவாக கொடுத்துவிட்டு கை கழுவிவிட்டு மறுபடியும் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தான்.


என்னிடம் என்ன காரியம் ஆக வேண்டும் என்று எனக்கு விருந்து அளித்தாய்? என்று நேரடியாக கேட்டான்.

காரியம் ஆக வேண்டும் என்பதால் தான் உனக்கு விருந்து அளித்தேன் என்று நினைக்கிறாயா? என்று கோபமாக கேட்டேன் நான்.

ஆம். மனிதர் காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே யாருக்கும் சோறு போடுவர். வேண்டும் என்றால் காலையும் பிடிப்பர்.

இருக்கட்டும். ஆனால் இந்த காரியம் எனக்காக இல்லை.

அப்படியா சந்தோஷம். விஷயத்தை சொல்.

என்னை ஒரு பள்ளியின் கருத்தரங்கில் பேச அழைத்திருக்கிறார்கள். நீயும் வந்தால் உன் ஞானத்தை வளரும் பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். நான் உன்னிடமிருந்து கற்ற விஷயங்கள் பல. அதில் சில வற்றை செயலாக்கி பயனும் கண்டேன். சில அறிவுரைகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலைகள்.

நல்லது. எந்த தேதி?

அடுத்த வாரம்.

ஒ நான் அடுத்த வாரம் அமெரிக்கா போகிறேன். வர முடியாதே.

ஒ நீ வெளி நாடெல்லாம் போயிருக்கிறாயா?

என்ன சந்தேகம் உனக்கு? 50 நாடுகள் போயிருக்கிறேன்.

ஒ நல்ல விஷயம். அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. நீ என்று வரமுடியுமா அன்றே கருத்தரங்கை வைத்துக் கொள்ளலாம். எப்போது வரமுடியும் என்று சொல்?

அடுத்த மாதம் 14ம் தேதி. சரியா?

சரி. நான் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன். நீ உன் வெளிநாட்டு அனுபவங்களை சொல்லேன்.

நானே கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை பற்றி சொல்லவா என்று கேட்டான். “நானே” – ரொம்பத்தான் கர்வம் இவனுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

சரி சொல்லேன்.

நான் ஒரு முறை இங்கிலாந்து செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தேன். என் அருகில் இரண்டு மனிதர். (மறுபடியும் அந்த ஞானித்தனம்). இருவரும் இலவச மதுபானம் குடிக்கும் போட்டியில் இருந்தனர் போலும். விமானப் பணிப்பெண்ணுடன் சண்டை. இன்னும் மது அளிக்க வேண்டும் என்று. அவளோ நீங்கள் அதிகம் குடித்துவிட்டீர்கள். இதற்கு மேல் வேண்டாம் என்று மன்றாடினாள். அவர்கள் கேட்கத்தயாராகவில்லை. சரியென்று இன்னொரு சுற்று மதுபானத்தை கொண்டு வந்து கொடுத்தாள். அதை குடித்த அந்த மனிதன் சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மூச்சு முட்டி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டான்.
பிறகு அவன் சண்டையிட்ட அதே பெண் அவனுக்கு பிராணவாயு வைத்து அவன் நிலமையை சீராக்கினாள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்று என்னை கேட்டான்.

விமானத்தில் குடிக்கக் கூடாது, சரியா? என்று உற்சாகமாக கேட்டேன்.

முட்டாள். அது குழந்தைகளுக்கு கூட தெரியும்.

பிறகு?

உன் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத விஷயங்களை வெறும் பகட்டுக்காக மட்டும் செய்யாதே. இது தான் நான் கற்றுக் கொண்ட பாடம்.

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]