Google
 

Wednesday, December 27, 2006

மீண்டும் ஞானி – 5. மதம்

மீண்டும் ஞானி – 5. மதம்

கருத்தரங்கம் களை கட்டியிருந்தது. மாணவர்களும் உற்சாகமாக இருந்தனர். ஆசிரிய ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் கூட கருத்தரங்கில் இணைந்துவிட்டனர். கருத்தரங்கு என்பதை விட ஞானி – கேள்வி-பதில்கள் நிகழ்ச்சியே நடந்து கொண்டிருந்தது.

ஒரு மாணவன் எழுந்து ஐயா, மதம் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டான்.

மதம் என்பதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கற்பனை நிலையைப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்தான்.

ஆஹா, ஞானியும் ஜோதியில் கலந்துவிட்டான். இத்தனை நாளாக இதுமாதிரி பொறுமையாக என் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறானா. பிள்ளைகள் என்றதும் ஞானிக்கே பொறுமை வந்துவிட்டதே என்று நினைத்தேன். அவன் பேசுவதை ரசித்தேன்.

நான் இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்கிறேன்:

மனிதன் அவன் குணப்படி சண்டையிடும் உணர்ச்சி கொண்டவன். ஒரு கற்பனை செய்து பார்ப்போமே?

உலகம் முழுவதும் இந்துக்களாக மக்கள் மாறிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (மதச்சண்டை)

இல்லை.

பிறகு மேல் சாதி இந்து கீழ் சாதி இந்துவுடன் சண்டையிடுவான். இல்லையா.

உலகம் முழுவதும் மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (சாதிச்சண்டை)

இல்லை.

பிறகு பணக்கார மேல் சாதி இந்துக்கள் ஏழை மேல் சாதி இந்துக்களுடன் சண்டையிடுவர்.

உலகம் முழுவதும் பணக்கார மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (அந்தஸ்து சண்டை)

இல்லை.

பிறகு பணக்கார மேல் சாதி இந்து தன்னுடைய நிலத்திற்காகவோ இன்னொருவருடைய பெண்ணுக்காவோ மனைவியை அபகரிக்கவோ சண்டையிடுவான்.

ஆக நிலம் நீர் பெண் சொத்து நிறம் சாதி சமயம் என்று சண்டையிட வழிகளை தேடுவது தான் மனித இனம். இதில் பகுத்தறிவுக்கு இடமே இல்லை. ஏனென்றால் பகுத்தறிவு எள் அளவும் நமக்கு இருந்தால் இன்று உலகில் பல பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

ஆக உலகத்தின் வயது ஏற ஏற முதிர்ச்சியோ அமைதியோ வருவதற்கு பதிலாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சண்டை, விஞ்ஞானத்தை பயன்படுத்தி அதிக அளவு இழப்பைக் கொடுக்கும் போர்கள், இதுவே நடந்துவருகின்றன்.

ஆக மக்கள் தொகைக்கு ஏற்ப நாச சக்தியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடவுளையும் மதங்களையும் மனிதன் தான் படைத்தான். அது மக்களை பிரித்து பகுத்து ஆளவே இந்த வேறுபாடுகள். இவை என்றும் மாறாது. கருப்பனும் வெளுப்பனும் இணைந்து புகைப்படத்திற்காக நிற்பார்கள். மனதால் என்றும் அவர்களை மாற்றமுடியாது. தேர்தல் வந்தால் இந்துவும் முஸ்லீமும் சேர்ந்து இஃப்தார் செய்வார்கள். ஆனால் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நினைப்பது வாதத்திற்கு மட்டுமே சரியாக இருக்கும்.


கேள்வி கேட்ட மாணவன் எழுந்து, அப்படியென்றால் இந்த சண்டைகள் நிற்காதா. அமைதியான உலகை எங்கள் சந்ததி பார்க்க முடியாதா என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

வரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. எப்போது சரி தவறு என்று பிரித்தெடுக்கும் அறிவு வளர்கின்றதோ, எப்போது பொய்யை ஆதரித்து உண்மையை குழி தோண்டி புதைக்கும் பழக்கம் போகிறதோ, எப்போது பொய்யையும் புரட்டையும் அழிக்கும் ஞானம் வருகிறதோ, அப்போதே இந்த குருட்டுத்தனங்கள் விலகி அறிவொளி வீசத்தொடங்கும்.

அதுவரை என்ன செய்வது என்று கேட்டான் இன்னொரு மாணவன்.

அதுவரை காத்திருக்காமல் ஞானத்தை வளருங்கள், போலிகளை வளரவிடாமல் தடுக்க தயாராகுங்கள்.

Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]